Sunday, 23 September 2012

அந்தரத்தில் பழுதாகி நின்றது ராட்டினம் 300 அடி உயரத்தில் திக் திக்.. பயணிகள் 4 மணி நேரம் தவிப்பு


கலிபோர்னியா : அமெரிக்காவில் உள்ள பொழுதுப்போக்கு பூங்காவில் ராட்சத ராட்டினத்தில் சிக்கி 20 சுற்றுலா பயணிகள் 4 மணி நேரம் தவித்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ளது நாட் பெர்ரி பார்ம் பொழுதுப் போக்கு பூங்கா. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள ராட்சத ராட்டினம் மிகவும் திரில்லிங்காக இருக்கும். வெறும் 3 நிமிடங்கள் மட்டும் 300 அடி உயரத்தில் சுற்றிவிட்டு தரையிறங்கும். ராட்டினத்தில் சுற்றும் போது வானில் பறப்பது போன்ற பரபரப்பு காணப்படும்.

கடந்த புதன்கிழமை மாலை 4.40 மணிக்கு இந்த ராட்டினத்தில் 20 பேர் சுற்றிவர இருக்கைகளில் அமர்ந்தனர். இயந்திரத்தை இயக்கியவுடன் ராட்டினம் 300 அடி உயரத்துக்கு சென்றது. அங்கு சென்ற பின் ராட்டினம் 3 நிமிடம் அதிவேகத்தில் சுற்ற வேண்டும். ஆனால், ராட்டினத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. அந்தரத்தில் இருந்த 20 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த பூங்கா அதிகாரிகள், யாரும் பயப்பட வேண்டாம். விரைவில் இயந்திரத்தை சரிசெய்து விடுவோம் என்று ஒலிபெருக்கியில் அறிவித்தனர்.

இன்ஜினியர்கள் வந்து பழுது பார்க்க தொடங்கினர். அதற்குள் இருட்டி விட்டது. பொழுதுப் போக்கு பூங்கா பார்வை நேரமும் முடிந்து மூடப்பட்டது. நான்கு மணி நேர போராட்டத்துக்கு பிறகு ராட்டினத்தை பத்திரமாக கீழே இறக்கினர். இதுகுறித்து பூங்கா நிர்வாகம் கூறுகையில், ராட்டினத்தில் இருந்தவர்கள் யாருக்கும் பாதிப்பில்லை. சிலர் அந்தரத்தில் காலாட்டிக் கொண்டு ஜாலியாகத்தான் இருந்தனர் என்று தெரிவித்துள்ளது. கடந்த 7ம் தேதியும் ராட்டினம் அந்தரத்தில் சென்ற போது இயந்திர கோளாறு காரணமாக நின்று விட்டது. இதனால் சர்ச்சை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment